சுவாதியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட அரிவாளில் ராம்குமார் கைரேகை இல்லை?

642

Swathi

சுவாதியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக கூறி பறிமுதல் செய்யப்பட்டுள்ள அரிவாளில் ராம்குமார் கைரேகை பதியவில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தடயவியல் சோதனையில் போலீஸார் தாக்கல் செய்த அரிவாளில் கைரேகை இல்லை என்று முடிவு தெரிய வந்துள்ளதாக தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் ராம்குமார் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த சட்டையின் மூலமாக தங்களுக்கு வலுவான ஆதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீஸார் உள்ளனராம்.

ஜூன் 24ம் திகதியன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக ராம்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்த நிலையில் ராம்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

அதன்படி அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாள், அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டை உள்ளிட்டவை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் முடிவுகள் தற்போது போலீஸாருக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் அரிவாளில் கைரேகை எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் ராம்குமாரின் சட்டையில் உள்ள இரத்தம் சுவாதியுடையது என்று போலீஸார் திடமாக நம்புகின்றனர்.

விரைவில் தடயவியல் ஆய்வறிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.