அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தைக்கு ஒக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு தந்ததால் குழந்தை இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Bankstown-Lidcombe மருத்துவமனையில்தான் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு ஒக்சிஜன் உருளைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தினர் தவறுதலாக குறிப்பிட்ட பகுதியில் சிரிப்பூட்டும் வாயுவை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று Sonya Ghanem என்பவரது குழந்தைக்கு பதிவு பரிசோதனைகாக மருத்துவ குழுவினர் வந்துள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு மூச்சுத்திணரல் இருந்து வருவதை உணர்ந்த மருத்துவ குழு ஒக்சிஜன் வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
அதன் அடிப்படையில் குழந்தைக்கு குறிப்பிட்ட மருத்துவமனை ஊழியர்கள் ஒக்சிஜன் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஒக்சிஜன் வழங்குவதற்கு பதிலாக குழந்தைக்கு சிரிப்பூட்டும் வாயு அளித்துள்ளனர். இதனால் குழந்தை இறந்துள்ளது. இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற குழந்தையின் தாயார் நடந்த சம்பவத்தை கூறி அழுதது அப்பகுதியில் இருந்தவர்களை கலக்கமுற வைத்துள்ளது.
இதே மருத்துவமனையில் கடந்த 2014 ஆம் ஆண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் குறிப்பிட்ட குழந்தைக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், குறிப்பிட்ட மருத்துவமனையின் குழந்தைகளுக்கான பிரிவை விசாரணை முடியும் வரை மூட வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய அனைத்து உதவிகளும் அரசு முன்னெடுத்து ஆவன செய்யும் என உறுதி அளித்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்த தவறுதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனம், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.






