கிளிநொச்சி – பளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிரதான சந்தேகநபரே நேற்று (08.08.2016) மாலை பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி தம்மை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியாக பொலிஸ் நிலையத்தில் சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்தே தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் விடுதியின் முகாமையாளர் மற்றும் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (09) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் விடுதி, நீதிமன்ற உத்தரவால் சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த விடுதியின் உரிமையாளரையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






