தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவர், ஐந்து லட்சம் ரூபா ரொக்கப் பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் என தெரிவித்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி, பிணை வழங்குபவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று நீதிமன்றில் தயா மாஸ்டர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்குபவர்களும் வருகை தந்திருந்தனர்.
பிணை வழங்குபவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மூவரை ஏற்றுக் கொண்டதுடன் ஒருவரது விண்ணப்பத்தை நிராகரித்தார். இதனால் அரச பிணை வழங்குபவர் உடனடியாக கிடைக்காமையால் மீண்டும் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.
பின்னர் இருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையிலேயே தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






