வழிதவறிய மகனை கூலிப்படை வைத்துக் கொன்ற தந்தை!!

1434

Murder

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழித்தவறிச் சென்ற தனது மகனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அஷோக் த்விவேதியை, கூலிப்படை வைத்து மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 6ம் திகதி ஜூன்புட் கடற்கரையோரப் பகுதியில் ஒரு இளைஞரின் சடலம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அதுகுறித்த விசாரணையில், 28 வயது பட்டதாரி அனிமேஷ் த்விவேதி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், தொழில்முறைக் கொலையாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலில், அம்னீஷைக் கொலை செய்ய தங்களுக்கு அவரது தந்தை அஷோக் பணம் கொடுத்ததாகவும், தனது மகன் குடிப்பது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது போன்றவை பிடிக்காததால், அவனைக் கொலை செய் முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அஷோக்கை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.