சுற்றுலாத்துறையினரின் பார்வைக்காக சட்டவிரோதமான முறையில் வன விலங்குகளைத் தடுத்துவைத்திருந்த ஒருவரை தம்புள்ள பிரதேசத்தில் வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்படி சட்ட விரோத மிருகக்காட்சி சாலை தம்புள்ள பிரதேசத்திலுள்ள கபுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்று வந்துள்ளது. சீகிரிய வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி நேற்று இம்முற்றுகை இடம் பெற்றுள்ளது.
ஒரு ஹோட்டலின் பின் பகுதியில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட கூடுகளில் இவை அடைக்கப்பட்டிருந்த வேளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி விலங்குகள் காயமடைந்திருந்ததன் காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவற்றை தாம் அடைத்து வைத்திருந்ததாக மேற்படி ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
ஆந்தை, முள்ளம் பன்றி, ஆமை போன்ற அரிய உயிரனங்கள் பலவும் இதில் இருந்துள்ளன.
சந்தேக நபரை தம்புள்ள நீதவான் மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






