வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் ஓர் முன்னாள் போராளியின் குமுறல்கள்!!

1128

Poraali

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் போது முன்னாள் போராளி ஒருவர் தனது ஆதகங்களை பின்வருமாறு வெளியிட்டார்..

அரசியல்வாதிகள் தங்களது சுய லாபநோக்குடன் தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதைத் தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை .

முன்னாள் போராளிகள் 107 பேர் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன.

நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை, தடுப்பூசிகளை பரிசளித்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.

அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகள் அல்லது புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளுக்கே தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மனதளவில் பாதிப்படைந்துள்ளோம்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம், எமக்கு தீர்வுத் திட்டம் வேண்டுமேன பேசும் அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.

முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைக்கப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளியிடப்படவில்லை. முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.

நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக. இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் எமது போராட்டம். நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும். நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காகவே.

முன்னாள் போராளிகள் எங்களுக்கு தனிநாடு, எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள். அவர்களை நாங்கள் நினைவுகூறுவதற்குக் கூட தற்போது எதுவும் இல்லை.

என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140 போராளிகளில் நாங்கள் 4 பேர்தான் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூற முடியாதா?

யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே?

உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.

முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்குச் சென்றால்கூட புலனாய்வுப் பிரிவினர் எம்மை பின் தொடர்கின்றனர்.

அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.