பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு!!

471

Murder

கடத்தப்பட்டதாக கூறப்படும் பம்பலப்பிட்டி வர்த்தகரின் சடலம் மாவனெல்லை – ஹெம்மாத்தகம வீதியின் ருக்குல்கம பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வர்த்தகரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்களுடன் நேற்றிரவு அந்த இடத்திற்கு சென்றிருந்தனர்.

அங்கு மீட்கப்பட்ட சடலத்தை வர்த்தகருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று முற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன்பொருட்டு வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி, கொத்தலாவல ஒழுங்கையின் 21 ஆம் இலக்க முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட 29 வயதான மொஹமட் ஷகீப் சுலைமான் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தோனேஷியா மற்றும் சீனாவிலிருந்து ஆடை இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.