சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் புகழாரம் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.
இவரது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார, இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீரர் ஒருவரே டில்சான். களத்தில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய திறமையுடைய நல்ல ஒரு வீரரை இலங்கை கிரிக்கெட் இழந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் அற்புதமான சேவகனே டில்சான் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். டில்சான் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசாகும். டில்சானுடன் விளையாடியமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.