விசாரணைகளைத் திசை திருப்பவே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளது!!

580

Sulaiman

விசாரணைகளைத் திசை திருப்புவதற்காகவே பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி பம்பலப்பிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டதுடன், மாவனெல்ல பகுதியில் நேற்று முன்தினம் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்தது.

உயிரிழந்த சுலைமானின் தாய்வழி உறவினர்களுக்கே வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிரேதப் பரிசோதனை நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள் அவரின் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுலைமானின் ஊழியர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 6 கோடிக்கும் அதிக பணத்தை சுலைமானிடம் இருந்து பலர் கடனாகப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.