இருவர் உயிரிழக்கக் காரணமான யானையைத் தேடும் வனவிலங்கு திணைக்களம்!!

1007

Ele

புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (27.08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த யானையை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யானைக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் யானை தேடப்பட்டு வருவதாக, புத்தளம் மாவட்ட வனவிலங்கு திணைக்களம் குறிப்பிட்டது.

புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ பகுதியில், 11 பேருடன் பயணித்த வேன், யானை மீது மோதியதையடுத்து யானை வேனைத் தாக்கிய சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை பதிவாகியிருந்தது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக, புத்தளம் மாவட்ட வன விலங்கு அதிகாரிகள் குறித்த யானையை தேடும் நடவடிக்கையை நேற்று மாலை முதல் முன்னெடுத்துள்ளனர்.

யானை இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் யானையை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வனவிலங்கு அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து விமான நிலையம் நோக்கி, 11 பேருடன் பயணித்த வேன் மீது, புத்தளம் – அநுராதபுரம் வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் வைத்து யானை தாக்கியது.

நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனொருவனும், யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதான நிமல்ராஜ் என்பவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.