கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேஷியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ரா ஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐவரைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பலத்த தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் அன்சார், கோலாலம் பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேஷிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி டத்தோ முஹம்மத் அத்னான் அப்துல்லாஹ் மேற்படி சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் கைத செய்யப்பட்ட நபர்கள் பற்றிய மேலதிக விபரங்களை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதேவேளை மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகரை அழைத்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள வெளிவகார அமைச்சின் செயலாளர், விரும்பத்தகாத இச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு சென்றிருந்த அமைச்சர் தயா கமகேவை வழியனுப்பும் பொருட்டு மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நேற்று முன்தினம் மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற சமயமே அங்கு குழுமியிருந்த ஒரு குழுவினர் அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி. காணொளியும் மலேசிய ஊடகங்களில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற மேலாடை அணிந்திருக்கும் உயர்ஸ்தானிகர் அன்சாரை துரத்தி வரும் 5க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்குதல் நடாத்தும் காட்சி சி.சி.ரி.வி.யில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
உயர்ஸ்தானிகரை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தவாறே அவரது முகத்திலும் தலையிலும் ஐவர் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தும் காட்சியும் மற்றொருவர் உயர்ஸ்தானிகரின் வயிற்றுப் பகுதியில் கால்களால் உதைக்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
அதே சமயம் அவ்விடத்துக்கு வரும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் உயர்ஸ்தானிகரின் உதவியாளர்களும் அவரை தாக்குதல்தாரிகளிடமிருந்து மீட்டு அழைத்துச் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






