அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர், பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்த முடியாததால் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியபோது, அவரின் நண்பி ஒருவரின் ஏற்பாட்டில் அம்மாணவிக்காக “கிரவுட்ஃபண்ட்ஸ்” மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் 19,000 அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
சந்துனி சுலோச்சனா எனும் இம்மாணவி அவுஸ்திரேலியாவின் மெல் பேர்ன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாத் துறையில் கல்வி கற்கிறார். ஆனால், சந்துனி சுலோச்சனாவின் பெற்றோரால் பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்த முடியாமல் அவர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டார்.
பகுதி நேரமாக சந்துனி தொழில் புரிந்த போதிலும் அவரால்செலவுகளை சமாளிக்க முடியவில்லை. முந்தைய அரையாண்டுக்கான கட்டணம் பாக்கி மற்றும் புதிய அரையாண்டுக் கட்டணமாக அவர் 20,549 அவுஸ்திரேலிய டொலர்களாக செலுத்த வேண்டியிருந்ததாம்.
முந்தைய அரையாண்டு கட்டணமான 4549 டொலர்களை ஓகஸ்ட் இறுதிக்குள் செலுத்தாவிட்டால் அவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்கினாராம்.
இந்நிலையில், சந்துனி சுலோச்சனாவுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு அவரின் நெருங்கிய நண்பியான மற்றொரு மாணவி தவீஷா ரம்புக்வெல முன்வந்தார். இதன்படி, பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்கு உதவும் GoFundMe (கோஃபண்ட்மீ) எனும் இணையத்தளத்தில் சந்தினிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார் தவீஷா ரம்புக்வெல்ல.
ஆகஸ்ட் 26 ஆம் திகதி மேற்படி இணையத்தளத்தில் தவீஷா வெளியிட்ட தகவலில், “சந்துனி மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் தனது இறுதி அரையாண்டில் உள்ளார். அவர் தற்போது தொழில் புரிகிறார்.
ஆனால் அவர் சம்பாதிக்கும் பணம் வாடகைக்கே செலவாகியது. அவரின் பெற்றோரால் கட்டணங்களை செலுத்த முடியவில்லை. கடினமான இரு வருட கல்வியின் பின்னர் அவர் பொருளாதார ரீதியில் மிக நெருக்கடியில் உள்ளார். கடந்த அரையாண்டுக்கான கட்டணத்தில் 4549 டொலர்கள் (சுமார் 516,000 ரூபா) நிலுவையாக உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
“இது தவிர, தற்போதைய அரையாண்டுக்காக 16,000 டொலர்களை (சுமார் 18 லட்சம் ரூபா) செலுத்த வேண்டும்.
மாத இறுதிக்குள் கடந்த அரையாண்டுக் கட்டண நிலுவையை செலுத்தாவிட்டால் அவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படும் நிலைலய எதிர்நோக்கியுள்ளார். செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் தற்போதைய அரையாண்டின் பாதித் தொகையான 8000 டொலர்களையும் செலுத்த வேண்டும்.
எனவே, அவரின் கடன்களை செலுத்தி அவர் பட்டதாரியாகுவதற்கு உதவுங்கள். அவர் அருமையான நபர். மிகக் கடினமாக பாடுபடுபவர்” எனவும் தவீஷா ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
அதையடுத்து 12 நாட்களில் 145 பேர் மூலம் 19,069 டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. 10 டொலர்கள் முதல் 300 டொலர்கள் வரை பலர் நன்கொடை வழங்கியிருந்தனர்.
எவ்வாறெனினும், சிலரிடம் சந்துனி உதவி கோரியபோதிலும் எவரும் உதவ முன்வராத நிலையிலேயே, சந்துனிக்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட தான் நடவடிக்கை மேற்கொண்டதாக தவீஷா ரம்புக்வெல கூறியுள்ளார்.
“தமது கல்விக் கட்டணங்களை செலுத்த மக்கள் நன்கொடை வழங்கியதால் சந்துனி மிக மகிழ்ச்சியடைந்துள்ளார். தனக்காக மக்கள் ஆதரவு அளித்தமை தொடர்பில் அவர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் என தவீஷா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.






