வவுனியாவில் நேற்று (17.09.2016) மாலை 3.30 மணியளவில் வவுனியா – பாலமோட்டை தனியார் பேரூந்து பெண் சாரதியினை கேவலமான முறையில் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் பேசியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் பல வருடங்களாக தமிழ் பெண் ஒருவர் தனியார் பேரூந்து ஒன்றில் சாரதியாக பணியாற்றி வருகின்றார். அவரது கணவரும் அதே பேரூந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார்.
புதுமைப் பெண் என பலரால் பேசப்படும் இப் பெண், பெண்களாலும் இவ்வாறு பணிபுரியமுடியும் என்பதுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.
நேற்று (17.09.2016) மாலை வவுனியா ஹோரவப்பத்தானை வீதியில் பயணிகளை ஏற்றுவதற்காக தரிந்து நின்ற வவுனியா- பாலமோட்டை தனியார் பேரூந்தின் சாரதி ( பெண்) மீது அதே பாதையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் நடத்துனர் தகாத முறையில் பேசியது மட்டுமின்றி அவரை புகைப்படமும் எடுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனியார் பேரூந்தின் சாரதி ( பெண்) மற்றும் பயணிகள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.







