ஆங்கில அகராதிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஒக்ஸ்போட் அகராதியில் ‘ஐயோ’, ‘ஐயா’ என இரண்டு புதிய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன.
உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போட் அகராதி நிறுவனம் சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காக தன்னிடம் 6 லட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில், தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளை ஒக்ஸ்போட் அகராதி கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகம் புழங்கும் இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.