கம்பஹா பிரதேசத்தில் தனது காதலியை உளவு பார்ப்பதற்காக பெண் வேடம் தரித்து நடமாடிய நபரொருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கடும் எச்சரிக்கை மத்தியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நபர் நீண்டகாலமாக பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் சில காலமாக அப்பெண்ணுக்கு வேறொரு காதலன் இருப்பதாக சந்தேகம் கொண்டு அவரை உளவு பார்ப்பதற்கென புர்கா அணிந்து பெண்களை போன்று கவுனும் அணிந்து அவரை பின்தொடர நினைத்து கம்பஹா ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்துள்ளார்.
இவர் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிந்த போதிலும் கண்கள் இரண்டும் வெளியில் தெரியும் வகையில் அதனை அணிந்துள்ளார்.
வழமையான பெண்களுக்கு போன்றல்லாது இவருக்கு சற்று பெரிய புருவங்கள் காணப்பட்டமையினால் சந்தேகம் கொண்ட சிலர் அந்நபருக்கு அருகில் சென்று சோதனையிட்ட போது அவர் ஒரு ஆண் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்நபர் ரயில் நிலையத்தில் இருந்தவர்களால் பிடிக்கப்பட்டு கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்ட போது தனது காதலியை உளவு பார்ப்பதற்காக இவ்வாறு பெண் வேடம் அணிந்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன்பின்னர் அவரை பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன் அவரது பெண்ணாடையையும் திருப்பிக் கொடுத்து விடுதலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






