24 AM STUDIOS நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து, சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடித்த ‘ரெமோ’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், பி.சி.ஸ்ரீராம், அனிருத், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது,
‘‘என்னை இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்த பாக்யராஜ் கண்ணனுக்கு நன்றி! நான் அழகாக இருக்கிறேன் என்று என்னை உணர வைத்தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமை.
நான் லேடி கெட்டப்பில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷ் பல உதவிகள் செய்தார். அது மறக்க முடியாது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா கடின உழைப்பாளி.
இப்படத்திற்காக அதிகமாக உழைத்தவர் அவர்தான். நான் 18 மணிநேரம் வேலை பார்த்து விட்டு வீடு திரும்புவேன். என் குடும்பத்துடன் இருப்பேன். ஆனால், இந்த படம் துவங்கிய நாளிலிருந்து ராஜா வீட்டுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து வேலை பார்ப்பார்.
இப்படி வேலை செய்யும் இவரை பலர் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை. ஆனால், எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.
ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை’’ என்று கூறியவாறு கண்கலங்கினார் சிவகார்த்திகேயன். ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசுகையில், ‘‘எந்த ஒரு படமும் நூற்றுக்கு நூறு பேரையும் திருப்திபடுத்தாது.
அப்படியான படத்தை யாராலும் எடுக்க முடியாது. சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. இது காலம் காலமாக இருந்து வருகிற விடயம் தான். பிடித்தால் நான்றாக எழுதுங்கள்! பிடிக்கவில்லையென்றால் குறைகளை சுட்டி காட்டுங்கள்! திருத்திக் கொள்கிறோம்.
இப்படத்தின் வெற்றி எங்களுக்கு பெரும் உற்சாகம் தருகிறது. இது வெற்றிவிழா இல்லை! இப்படத்தை வெற்றிபெற செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான்! இந்த டீம் மீண்டும் இணைந்து படங்கள் பண்ணும்! நாங்கள் முடிந்தவரை யிலும் தரமான படங்களை தர முயற்சிப்போம்’’ என்றார்.






