27 நாட்கள், 700 கி.மீற்றர் நடைபயணம் : ஜெயவர்த்தனேவின் முயற்சிக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

783

mahela

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே புற்று நோய் பிரிவு மருத்துவமனை அமைப்பதற்காக இதுவரை 700 (70 கோடி இலங்கை ரூபாய்) மில்லியன் நிதி திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவரான ஜெயவர்த்தனே இலங்கையில் தென்பகுதி நகரான காலியிலுள்ள காரப்பிட்டிய மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு ஒன்றை அமைப்பதற்காக நிதி திரட்டி வருகிறார்.

இதன் காரணமாக அவர் இலங்கையில் நிதி சேகரிப்பதற்காக வடக்கே பருத்தித்துறையிலிருந்து, தெற்கு தேவேந்திரமுனை வரை நடைபயணம் மேற்கொண்டார்.

இவருடன் இலங்கை அணியைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் பலரும் நிதி திரட்டுவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டனர்.

ஜெயவர்த்தனேவின் விடா முயற்சியால் இதுவரை அவருக்கு 700 மில்லியனுக்கும் (இலங்கை ரூபாய்) அதிகமாக மக்கள் நிதியுதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் இம்மருத்துவமனைக்கு 750 மில்லியன் இலங்கை ரூபாய் நிதி திரட்டப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும், இதனால் அவரின் நிதி சேகரிப்பு மேலும் தொடரும் எனவும் கூறப்படுகிறது.

இதுவரை 27 நாட்கள் நடந்து, சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நிறைவு செய்த ஜெயவர்த்தனேவின் தலைமையில் புற்று நோய் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதற்கு முன்னர் இவர் தலைமையிலான குழுவினர் இதேபோன்றதொரு நடைபயணத்தின் மூலம் இலங்கையின் வடக்கே தெள்ளிப்பளையிலும் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை கட்டுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொடுத்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.