யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (18.11.2016) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவனியானது சிந்தாமணிப்பிள்ளையார் கோவிலூடாக கண்டி வீதி சென்று பஸார் வீதி ஊடாக ஹொறவப்பொத்தான வீதிவழியாக மன்னார் வீதி சென்று பூங்கா வீதியிலிருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்கு நடைபவனி சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வடமாகாண இணைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியாக 1991ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1997ம் ஆண்டு வவுனியா வளாகமாக தரம் உயர்த்தப்பட்டு பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் வியாபார கற்கைகள் பீடத்தையும் உருவாக்கி 900 பட்டதாரிகள் பட்டக்கீழ்ப்படிப்பு மாணவர்களை உள்ளடக்கியதான உன்னதமான ஓர் உயர் கல்வி நிறுவனமாக சேவையாற்றி வருகின்றது.
தேசிய அளவில் வினைத்திறன்மிகு பட்டதாரிகளை உருவாக்கி தேசிய அபிவிருத்தியில் ஓர் உன்னதமான பங்களிப்பை வழங்குகின்ற ஓர் கல்வி நிறுவனமாக இனங்காணப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வியாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், பழைய மாணவர்கள், பல்கலைக்கழக உத்தியோகர்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






























