
வவுனியாவில் பிரபல நகர்ப் பாடசாலை ஒன்றில் மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடாத்திய மாணவர்கள் என தெரிவித்து எட்டு பேரை பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா நகர மத்தியிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் நேற்று பாடசாலை வளவிற்குள் க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரண மாணவர்களிடையே குழுமோதல் இடம்பெற்றுள்ளது. எனினும் ஆசிரியர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்ததையடுத்து மாணவர்கள் மோதலை கைவிட்டுச் சென்றனர்.
எனினும் அதே மாணவர்கள் இன்று பாடசாலை விட்டுச் சென்றபோது பாடசாலை வளவிற்குள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய மாணவர்களின் குழு மோதல் காரணமாக இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து எட்டு மாணவர்களை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய மாணவர்களின் மோதல் தொடர்பாக பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டபோது, மாணவர்கள் பாடசாலை விட்டு வெளியே மோதலில் ஈடுபட்டுள்ளதால் அது தொடர்பாக எதுவும் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழைய மாணவர் சங்கம் விடுத்த அறிக்கையில், பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கா.பொ.த சாதரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையில் ஈடுபடாமல் குழு மோதலில் ஈடுபடுவதை நாம் வன்மையான கண்டிப்பதாகவும் தற்போது அப்பாடசாலையில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர் இன்மையே மாணவர்களின் இம்மோதலுக்கு காரணம்.
தற்போது கடமையிலுள்ள பாடசாலை அதிபர் தான் அப்பாடசாலையில் சேவையாற்ற முடியாது என்று கடிதமூலம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்தும் இப்பாடசாலையில் சேவையில் நீடித்து வருகின்றார்.
அதிபரின் இயலாமையே மாணவர்கள் இவ்வாறு தன்னிச்சையான போக்கை மேற்கொள்வதற்கு காரணம். பாடசாலை நிர்வாகம் சரியாக செயற்பட்டால் மாணவர்கள் இவ்வாறான குழு மோதலில் ஈடுபடமாட்டார்கள்.
இவ்விடயத்தில் வலயப்பணிப்பாளர் தலையிட்டு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீரின்மையை நீக்கி மாணவர்கள் நல்ல சூழ்நிலையில் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.





