கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகளை காட்சிப்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்தமை,
இறக்குமதியாளர் மற்றும் விநியோகத்தர் ஆகக்கூடிய விலை என்பன குறிப்பிடாது பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களில் உள்ள விலையை அழித்து அதிகரித்த விலை சுட்டுத்துண்டு ஒட்டியமை, பொருட்களை விற்பனை செய்யும் போது மிகுதிப்பணத்திற்கு பதிலாக மாற்றுப்பணடம் வழங்கியமை, வியாபார நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான முத்திரை இடப்படாத தராசு வைத்திருந்தமை என்பவற்றுக்கு எதிராகவே குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 634 வர்த்தகர்களுக்கு எதிராகவும் செப்ரெம்பர், ஒக்டோபர் மாதங்களில் வவுனியா முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 144 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.






