இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வருடத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை மூன்றாவது தடவையாக வென்றெடுத்தார்.
வருடத்தின் சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெறுகின்றார்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் மகுடம் சூட்டும் விழாவான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுவிழா, வோட்டர்ஸ் எஜ் மண்டபத்தில் புதன் இரவு கோலாகலமாக நடைபெற்றது.
2015 – 2016 கிரிக்கெட் பருவகாலத்தில் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களைக் கௌரவிக்கும் இவ்விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாகிஸ்தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்ரம் ஆகியோர் முறையே பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
வருடத்தின் மக்கள் அபிமான கிரிக்கெட் வீரருக்கான விருதினை டயலொக் ஆசியாட்டாவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கவுள்ள சுமித் வீரசிங்கவிடமிருந்து திலக்கரட்ண டில்ஷான் பெறுகின்றார்.
வருடத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்த ஏஞ்சலோ மெத்யூஸ், டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை போட்டிகளிலும் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான இரண்டு விருதுகளையும் வென்றெடுத்தார்.
வருடத்தின் மக்களின் அபிமான வீரராக சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற திலக்கரட்ன டில்ஷான் வென்றெடுத்தார்.
இவ் விழாவில் திலக்கரட்ன டில்ஷானும் லசித் மாலிங்கவும் தலா இரண்டு விருதுகளுக்கு சொந்தக்காரர்களாகினர்.
மக்கள் அபிமான வீரர் விருதை விட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த துடுப்பாட்டக்காரர் விருதையும் டில்ஷான் வென்றெடுத்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை அரங்குகளிலும் வருடத்தின் அதி சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதுகளை லசித் மாலிங்க வென்றெடுத்தார்.
கடந்த வருடம் முன்னேறிவரும் வீரருக்கான டயலொக் விருதை வென்றெடுத்த குசல் மெண்டிஸ், வருடத்தின் எதிர்கால கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றெடுத்தார். பாகிஸ்தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்ரமிடமிருந்து இந்த விருதைப் பெறும் பாக்கியம் குசல் மெண்டிஸுக்கு கிடைத்தமை அவரது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வருடத்தின் அதி சிறந்த டெஸ்ட் துடுப்பாட்டக்காரராக தினேஷ் சந்திமாலும் வருடத்தின் அதி சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராக ரங்கன ஹேரத்தும் தெரிவாகினர்.
வருடத்தின் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்டக்காரர் விருது குமார் சங்கங்காரவுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்
*அதி சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்டக்காரர்: சமரி அத்தப்பத்து.
*அதி சிறந்த சர்வதேச ஒருநாள் பந்துவீச்சாளினி: இனோக்கா ரணவீர.
*அதி சிறந்த சர்வதேச ஒருநாள் சகலதுறை வீராங்கனை: ஷஷிகலா சிறிவர்தன.
இதர விருதுகள்
*வருடத்தின் அதி சிறந்த வர்ணனையாளர்: ரசல் ஆர்னல்ட்.
*வருடத்தின் அதி சிறந்த ஊடகவியலாளர்: ரெக்ஸ் க்ளமென்டைன் (தி ஐலண்ட்).
*வருடத்தின் அதி சிறந்த மத்தியஸ்தர்: ருச்சிர பல்லியகுரு.
மகளிர் கிரிக்கெட் அணியினர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவருவதால் அவர்களில் எவரும் விருது விழாவில் கலந்துகொள்ள வில்லை.
குமார் சங்கக்கார, ரசல் ஆர்னல்ட், ரெக்ஸ் க்ளமென்டைன் ஆகியோர் தொழில் நிமித்தம் விருதுவிழாவுக்கு வருகை தரமுடியாமல் போனதாக தெரியவருகின்றது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.









