அம்பலாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பில், உறவினர்கள் சிலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இடம்தொட, மாதம்பே பகுதியில் நபரொருவர் தாக்கப்படும் காட்சிகள், வர்த்தக நிலையமொன்றின் சி.சி.டிவி கெமராவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பதிவாகியிருந்தது.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான நபர் அண்மையில் உயிரிழந்தார்.
குறித்த சி.சி.டிவி கெமரா பொருத்தப்பட்டிருந்த வர்த்தக நிலையத்திற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் நான்கு வயது பிள்ளை ஆகியோர் நேற்றைய தினம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமரா கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.
நேற்றிரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் பிள்ளையை ரி 56 ரக தன்னியக்க துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 35 வயதான இந்திக்க சொய்சா, அவரின் மனைவியான 27 வயதான தேவிகா சந்தரலதா மற்றும் அவர்களின் நான்கு வயது பிள்ளை ரந்திக டி சொய்சா ஆகியோரே உயிரிழந்தனர்.
நீதவான் விசாரணைகள் பலப்பிட்டிய பிரதம நீதவான் ஆர்.ஜயசிங்கவினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
பலப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்த சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சில பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.






