பலாத்காரம் செய்து மாணவி கொலை : இளைஞனுக்கு வாழ்நாள் சிறை!!

697

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வினிதா(17). கடந்த 2014ல் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்ததும் இவர், கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.

அதுவரை கோடை விடுமுறையில் வீரராக்கியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2014ம் ஆண்டு, ஜூன் 23ம் திகதி வேலைக்கு சென்று விட்டு இரவு 7மணியளவில் வினிதா சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை.

வெற்றிலை கொடிக்கால் வழியாக வந்தபோது அவரை மர்ம நபர் ஒருவர் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார். அவர் அணிந்திருந்த தோட்டையும் திருடிச்சென்று விட்டார். இது குறித்து மாயனூர் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு சம்பந்தமாக குளித்தலை அருகேயுள்ள நங்கவரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (32)என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராமச்சந்திரன்தான் வினிதாவை வழிமறித்து, தோட்டை பறித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

ராமச்சந்திரன் மீது, கரூர், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார். இதில் கடத்தல் குற்றத்திற்காக ராமச்சந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம், நகையை கொள்ளையடித்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக, வாழ்நாளில் மீதமுள்ள காலம் வரை ஆயுட்கால சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, இவையனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பாலியல் பலாத்கார குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதுமான சிறைத் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பானது தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமச்சந்திரனுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.