கிளிநொச்சியில் மது உற்பத்தி நிலையம் முற்றுகை!!

545

 
பெரியகுளம் – இரட்டைப்பனை பகுதியில் இயங்கிவந்த மது உற்பத்தி நிலையம் ஒன்று இன்று(15) பிற்பகல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன தலைமையில் விசேட குழுவினரால் இந்த நிலையம் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னனின் விசேட குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குழுவினர் அந்த பகுதிக்கு சென்று சுற்றிவளைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் போது, சுமார் 55550ml மது, ஆறு பெரல்களில் இருந்த 674750ml கோடா மற்றும் மது உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் என்பன புளியம்பொக்கணை ,பெரியகுளம் இரட்டைப்பனை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும் இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதோடு மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.