உல்லாசப் பயணியாக இலங்கை வந்துள்ள கொரிய யுவதி ஒருவர், நுவரெலியா நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் உடைமாற்றிக் கொண்டிருந்த போது அவரது உடம்பை வருடியதாக கூறப்படும் நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கைப் பெண்களை போன்று சேலை அணிந்து பார்க்கும் ஆசையில் 24 வயதான மேற்படி கொரிய யுவதி நுவரெலியாவிலுள்ள பிரபல ஆடையக மொன்றுக்கு சென்று சேலை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.
இலங்கை கலாசாரத்துக்கமைய தான் சேலையை அணிய விரும்புவதாகவும் தனக்கு சேலை அணிவிப்பதற்கு உதவி புரியுமாறும் அந்த யுவதி குறித்த ஆடை விற்பனை நிலைய முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அம்முகாமையாளர் ஆடையகத்திலுள்ள ஊழியரொருவரை அழைத்து சேலையை அணிவிக்க யுவதிக்கு உதவி புரியுமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விற்பனை நிலையத்திலுள்ள ஆடைமாற்றும் அறைக்கு கொரிய யுவதியை அழைத்து சென்று அவருக்கு சேலை அணிவித்து கொண்டிருக்கும் போது அவரது உடலை குறித்த ஊழியர் ஸ்பரிசம் செய்துள்ளார்.
இது தொடர்பில் கொரிய யுவதி 13 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நுவரெலிய பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனக ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






