மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள் : வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி!!

610

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நீர் மின் உற்பத்தி இந்த வருடம் 80 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

நீர்த்தேக்கங்களில் 40 வீதம் நீர் மட்டம் காணப்படுவதாகவும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படும் பகுதிகளிலுள்ள நீரேந்துப் பகுதிகளில் நீர் வற்றிப் போயுள்ளமையே மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நுகர்வோருக்கு தேவையான அளவு மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிரமத்திற்கு மத்தியில் பயிற்செய்கையில் ஈடுபட்ட போதிலும், உரிய நேரத்தில் மழை நீர் கிடைக்காமையினால் அம்பாறை திருக்கோவில் விவசாயிகளும் நிர்க்கதியாகியுள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் பகுதியில் விவசாயத்தை நம்பி சுமார் 2,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு சாகாமம் குளத்தின் ஊடாகவே நீர் பாய்ச்சப்படுகின்றது.

எனினும் இம்முறை ஏற்பட்ட வரட்சியை தொடர்ந்து சாகாமம் குளம் உள்ளிட்ட ஏனைய நீர்நிலைகள் வற்றிப்போனதால், 500 ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலம் இதுவரை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.