பாலத்திற்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி : ஆறு பேர் படுகாயம், இருவரின் நிலை கவலைக்கிடம்!!

406

 
மட்டக்களப்பு நகருக்குள் உள்ள வெள்ளப்பாலத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி உட்பட கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செல்லும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைசேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானபோது இராணுவ வீரர் ஒருவர் துரித கதியில் செயற்பட்டு ஆறு பேரையும் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறு பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரும் கர்ப்பிணிப்பெண்ணும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.