புறப்படத் தயாராகவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில், மதுபோதையிலிருந்த விமானி கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் கல்கெறி நகரிலிருந்து மெக்ஸிகோவின் கன்குன் நகருக்குப் புறப்படவிருந்த சன்விங் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியே மதுபோதையிலிருந்த குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்ப்பட்டுள்ளார்.
37 வயதான மிராஸ்லோவ் குரோனிச் எனும் இவ் விமானி, விசித்திரமாக நடந்துகொள்வதையும் பின்னர் உணர்விழந்திருப்பதையும் விமான ஊழியர்கள் அவதானித்தனர்.
இது தொடர்பான அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, அவ்விமான அறையிலிருந்து அவ்விமானியை அதிகாரிகள் வெளியேற்றினர்.
அவ் விமானி கைது செய்யப்பட்டு இரு மணித்தியாலங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவரின் உடலில் அனுமதிக்கப்பட்டதைவிட 3 மடங்கு அல்கஹோல் இருப்பது தெரியவந்தது.
நூற்றுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்ட அவ் விமானத்தை பின்னர், வேறொரு விமானி மெக்ஸிகோவுக்கு செலுத்திச் சென்றார்.






