வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் இன்றி மக்கள் அவதி!!

588

வவுனியாவில் பல இடங்களில் கடும் வறட்சி காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.

செட்டிகுளம் பாவற்குளம் 6ம் யுனிட் மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் நீரைப்பெற்றுவந்த நிலையில் வறட்சியின் காரணமாக குடிநீர் வற்றியுள்ளது.

இதன் காரணமாக குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக, இன்று பாவற்குளம் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு மக்கள் கொண்டுவந்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலே பல காலங்களாக குடிநீரைப் பெற்று வந்துள்ளதாகவும் தற்போதை வறட்சி காரணமாக குடிநீர் அற்று இருக்கும் பொதுக்கிணறினை ஆழப்படுத்திதருமாறும் அதைவிட தமது பகுதிக்கு குளாய் கிணறு ஒன்றினையும் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்களிடம் பொதுக்கிணறினை ஆழப்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பகுதியில் குளாய்க் கிணறு ஒன்றினையும் பெற்றுத்தருவதற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிடனும், மாவட்ட திட்டப்பணிப்பாளருடனும் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.