வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் பொங்கல் வாழ்த்துச் செய்தி!!

588

உழுதுண்டு வாழ்ந்த பரம்பரை உணவின்றி, உலை வைக்க முடியாத அளவுக்கு இயற்கையால் ஏமாற்றப்பட்ட பொங்கல் தினத்தை எமது மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

பொங்கல் படைத்து, புத்தாடை அணிந்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் நன்நாளை மகிழ்வுடன் கொண்டாட முடியாத நிலைக்குள் வன்னியின் விவசாயப் பெருங்குடிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இருப்பினும் இருக்கின்ற வளத்தினை கொண்டு எழிமையான, ஆரவாரமற்ற பொங்கலை பொங்கி மகிழ்ந்திட வாழ்த்தி நிற்கின்றேன்.

ஏமாற்றங்கள் எங்களை சூழ்ந்துவரினும் புதிய ஆண்டில் மேலும் மேலும் நம்பிக்கை வைத்து, தடைகள் தாண்டி, முன்னோக்கி பயணிக்க திடசங்கற்பம் கொள்வோம்.

கடினமான பாதையின் பயணம் விடியலுடன் நிறைவு செய்திட நம்பிக்கை கொண்டு உழைத்திடுவோம். ஏமாற்றங்கள், சவால்கள், தடைகள் எமது துன்பியல் அனுபவங்களாக, வரலாறாக கடந்து சென்றாலும் ஒற்றுமையுணர்வுடன் உழைத்திட்டால் ஓரடியேனும் கடந்து செல்ல முடியும். கட்சி, மத, பிரதேச வேறுபாடுகள் களைந்து அரசியல் உரிமைக்கான அவசியம் உணர்ந்து, ஓரணியாக நின்று ஓங்கி குரல் எழுப்ப இப்பொங்கல் தினத்தில் இறைவன் அனைவருக்கும் ஆத்ம பலத்தை வழங்கி அருள் பொழிய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

செந்தில்நாதன் மயூரன்,
மாகாணசபை உறுப்பினர்,
வடக்கு மாகாணம்