யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவரை, பெண் ஒருவர் உள்ளிட்ட இளைஞர்கள் மூவர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை – சுருவில் பகுதியிலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்திற்காக பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.
இதன்போது, வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயும் 7 மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய நாநேந்திரன் கம்சிகா என்ற பெண்ணை தடியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் குறித்தவர்கள் தப்பியோட முற்பட்ட போது, பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு இளைஞர்கள் ஊர்காவல் துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண் ஒருவர் உள்ளிட்ட மற்றுமொரு இளைஞர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊர்காவல் துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பொது மக்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதனால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.











