ஆண்டு தோறும் இலங்கையில் நீரில் மூழ்குவதன் மூலம் ஏற்படும் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1100 விடவும் அதிகம் என இலங்கை உயிர்ப் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணங்களின் போது நீரில் மூழ்கி உயிரிழப்போரை விடவும் அன்றாட நடவடிக்கைகளின் போது நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் 99 வீதமான மக்களுக்கு நீச்சல் தெரியாது.
நீச்சல் தெரியாதவர்களுக்கு சிறிய ஓர் நீர் நிலை கூட ஆபத்தாக அமையக் கூடும். நீர் நிறைக்கப்பட்ட பேசன் ஒன்றினால் குழந்தையின் உயிரை பறிபோகக்கூடிய அபாயமுண்டு.
நீச்சல் சாம்பியன்களினால் கூட நீந்த முடியாத ஆபத்தான வலயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. நீரில் மூழ்குவோரை காப்பற்ற சென்றே அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர். நீரில் மூழ்கி உயிரிழப்போரை பாதுகாக்கும் நுட்பங்கள் பற்றி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.
நீரினால் ஏற்படக்கூடிய உயிராபத்துக்கள் தொடர்பில் உயிர்ப்பாதுகாப்பு வழிமுறைகள் பாடசாலை பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென அசங்க நாணயக்கார கோரியுள்ளார்.