மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் காட்டுப் பகுதியில் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து ஏறாவூர் பொலிஸார் சவுக்கடிக் கிராமத்துக்குச் சென்று காட்டுப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
அதன் போது, பயன்படுத்தத் தக்க வகையில் காணப்பட்ட ரீ–56 ரக துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏறாவூர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், 119 க்குத் தகவல் தெரிவித்த மற்றொரு நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேடப்படும் நபர் தமது வீட்டில் வைத்திருந்த இந்தத் துப்பாக்கியை சவுக்கடிக் காட்டில் வீசி விட்டு 119க்குத் தகவல் வழங்கியதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.