மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

620

காத்தான்குடி – மீராபாலிகா மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 01 ஆம் திகதி வகுப்பாசிரியரான சேகுதாவூத் ரஸீட் என்பவரால் 03 ஆம் தரத்தில் கல்வி பயிலும் ரி.ஸம்றி அஹமட் எனும் மாணவன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிஸார் தேடி சென்ற நிலையில் அந்த ஆசிரியர் திங்கட்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் ஆசிரியரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும், மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம். றிஸ்வி இந்த மாணவன் தாக்கப்பட்டு காயங்களுக்கான புகைப்படங்களையும் நீதவானிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.