கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில் அங்கு குற்றங்கள் நடைபெறாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் கடந்த 20 வருடங்களாகவே அந்நாட்டில் 75 சதவீதமான சிறைகள், கைதிகள் இல்லாததால் பயனற்ற முறையில் இருந்துள்ளது. அதனால் குறித்த சிறைகள் முன்னாள் கைதிகளின் மறுவாழ்வு நிலையமாகவும், அகதிகள் இல்லமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளிலுள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம், அதிகமாக இருப்பதனால் கைதிகள் இல்லாமல் இருக்கும் நெதர்லாந்து சிறைகளை, வாடகைக்கு எடுத்து அங்கு தமது கைதிகளை சிறை வைத்து வருகின்றனர்.
அத்தோடு நார்ஜெர் ஹவன் சிறையை, நோர்வே 3 வருடங்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. அதற்காக வருடமொன்றிக்கு சுமார் 400 கோடி வாடகை வழங்குவதற்கு, ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் குறித்த சிறையில் அந்நாட்டின் 750 இற்கும் மேற்பட்ட கைதிகளை தங்கவைத்துள்ளது.
நெதர்லாந்து ஹர்லெம் சிறை, அகதிகளின் கால்பந்தாட்ட மைதானமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலைமைகள் தொடரும் பட்சத்தில், இன்னும் 4 வருடங்களில் அந்நாட்டின் 2600 சிறை காவலர்கள், வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெல்ஜியம், இங்கிலாந்து, ஹெய்ட்டிஇ இத்தாலி, அமெரிக்கா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில், கைதிகள் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.