ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, தேள்கள், சிலந்திகள் மற்றும் வண்டுகளை சமைத்து உட்கொண்டுள்ளார். 41 வயதான ஏஞ்சலினா ஜோலி, ஹொலிவூட்டின் முன்னிலை நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.
ஏஞ்சலினா ஜோலி இயக்கிய, First They Killed My Father (முதலில் அவர்கள் எனது தந்தையைக் கொன்றார்கள்) எனும் திரைப்படத்தின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கம்போடியாவில் நடைபெற்றது. இதற்காக தனது பிள்ளைகளுடன் கம்போடியாவுக்குச் சென்ற ஏஞ்சலினா ஜோலி, படக்குழுவினருக்கு தானே உணவு சமைத்துப் பரிமாறுவதற்குத் தீர்மானித்தார்.
இதன்போது, சிலந்திகள், தேள்கள் மற்றும் வண்டுகளை ஏஞ்சலினா ஜோலி பொரித்து உட்கொண்டதுடன் அவற்றை தனது பிள்ளைகளுக்கும் பரிமாறினார். பிசியிடம் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஏஞ்சலினா ஜோலி, “இவை இங்கு (கம்போடியாவில்) எப்போதும் உணவின் ஒரு பகுதியாக உள்ளன என எண்ணுகிறேன்.
அதேவேளை, யுத்த காலத்தில் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. மக்கள் பட்டினியால் வாடும் நிலையில், இத்தகைய உணவுகள் மூலம் அவர்கள் உயிர் பிழைக்கலாம் எனக் கருதுகிறேன்’ எனத் தெரிவித்தார்.
நடிகர் பிரட் பிட்டை திருமணம் செய்த ஏஞ்சலி ஜோலி 3 பிள்ளைளைப் பெற்றார். இவர்கள் தவிர மேலும் 3 பிள்ளைகளைத் தத்தெடுத்தார். அண்மையில் பிரட் பிட்டும் ஏஞ்சலினாவும் பிரிந்தனர். பிள்ளைகளை வளர்க்கும் உரிமையை ஏஞ்சலினா தக்க வைத்துக்கொண்டார்.
கம்போடியாவில் பிறந்த அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரான லோங் உங் எனும் பெண் எழுதிய நாவலையே ஏஞ்சலினா ஜோலி திரைப்படமாக இயக்கியுள்ளார். இத் திரைப்பட வெளியீட்டு விழாவில் கம்போடிய மன்னர் நோரோடொம் சிஹாமொனியும் கலந்துகொண்டார்.








