
பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி பேசியதற்காக நடிகர் கருணாஸ் மீது பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கருணாஸ் வீட்டின் முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொலிசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினார்கள்.
ஆனால் கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி முற்றுகையில் ஈடுபட்டார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை பொலிசார் கைது செய்து திருமங்கலத்தில் உள்ள சமூகநல கூடத்தில் வைத்தனர்.
அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் போய் பார்த்துள்ளார். காமராஜரை அவமதித்து பேசவில்லை என்றும் பத்திரிகையில் தவறாக பிரசுரித்துள்ளனர் எனவும் கருணாஸ் மறுப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், காமராஜர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என் மரியாதைக்கு உரியவர்.
அவர் தந்த சத்துணவை சாப்பிட்டுத்தான் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்த நிலைக்கு வந்தனர். அவரைப் பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.





