சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை தடுத்திருக்கலாம் : சிறைச்சாலைகள் அமைச்சு!!

483

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சகல தரப்புகளுடனும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரால் மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நீதிபதி ரூமி மர்சூக், முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் எஸ். மெதகம ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பின், இந்த விபரீதத்தை தவிர்த்திருக்க முடியும் என்பது விடயங்களை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகத் தலைவர் சமயங் எனப்படும் அருண உதயஷாந்த பதிரண உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 09 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.