அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை, பொலிஸ் உத்தியோகத்தர் பணிக்கான நேர்முகத் தேர்வின்போது தற்செயலாக ஒப்புக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வேர்ஜீனியாவைச் சேர்ந்த 21 வயதான டெய்லர் றே பிறைஸ் எனும் இந் நபர், பெண் ஒருவருடன் இரவு நேரத்தில் மதுபானம் அருந்திய பின், அப் பெண் மயக்கமடைந்திருந்த வேளையில், அவரின் சம்மதமின்றி பாலியல் உறவு கொண்டாராம். அத்துடன் இக் காட்சியை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்த வேளையில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த இந்த இளைஞர், தான் பெண் ஒருவருடன் மதுபானம் அருந்திய பின் அவருடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவித்திருந்தார். அக் காட்சியை படம்பிடித்து வைத்திருப்பதையும் அவர் ஒப்புக்கொண் டார்.
இரு வாரங்களின் பின்னர், மேற்படி யுவதியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர். டெய்லர் றே பிறைஸுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு இப் பெண் சம்மதம் தெரிவித்திருந்தாரா என பொலிஸாரால் வினவப்பட்டது.
டெய்லர் றெ பிறைஸுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தான் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும், உண்மையில் அவருடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்ட விடயமே பொலிஸார் கூறும் வரை தனக்குத் தெரியாது எனவும் அப் பெண் கூறினார். அதையடுத்து, டெய்லர் றெ பிறைஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.