இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் முட்டைப் பொறியலில் (Omelette) வெங்காயம் போடாததால் ஆத்திரமடைந்த ரவுடிகள் கடைக்காரரை துப்பாக்கியில் சுட்டு தப்பிசென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அளிகன்ஜ் பகுதியில் தீபு காஷ்யாப் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு நேற்று வந்த புஜாரி என்னும் நபர் அவரது 4 நண்பர்களுக்கு முட்டைப் பொறியல் கேட்டார்.
இதனை தயார் செய்த தீபு புஜாரியிடம் கொண்டுவந்து கொடுத்தார். அதில் வெங்காயம் இல்லாததை கண்ட புஜாரி கோபமடைந்து ஏன் வெங்காயம் போடவில்லை என தீபுவை கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த தீபு அண்மை காலமாக வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளதாகவும் அதனால் வெங்காயம் வாங்குவதை குறைத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தீபுவின் பதிலுக்கு சமாதானம் ஆகாத புஜாரி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தீபுவை சுட்டுவிட்டு நண்பர்களோடு அங்கிருந்து வெளியேறினார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிசார் தீபுவை மருத்துவமனையில் அனுமதித்து அவரை சுட்ட ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.