
ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் பெரும் பங்கு வகித்த ஸ்ரீதர் என்கின்ற நீலவேந்தன் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின் திருப்பூர் அனுப்பர்பாளையம் பெரியார் காலனி நேதாஜி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவது மகன் ஸ்ரீதர் என்ற நீலவேந்தன்(34).
சட்டத்தரணியான இவர் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயலாளராக உள்ளார். ஸ்ரீதர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாநகராட்சி பார்க்கேட் முன் வந்தார். திடீரென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் போத்தலை திறந்து உடல் முழுவதும் ஊற்றினார். பின்னர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் இது குறித்து திருப்பூர் வடக்கு பொலிசுக்கு தகவல் தெரிவித்தார். பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கருகிய நிலையில் இருந்த ஸ்ரீதரை 108 அம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பூர் அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முன்னதாக பொலிசாரிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் கூறியதாவது..
நான் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயலாளராக உள்ளேன். அருந்ததியினருக்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை. படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியும் சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றியும் வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அருந்ததியினர் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன். உரிய அதிகாரிகளிடம் குறைந்த பட்சம் அருந்ததியினருக்கு 6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காதுகொடுத்து கூட கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்தேன். எனது இனம் விழிப்புணர்வை அடையவே தீக்குளித்தேன் என்று கூறினார்.
ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் நீலவேந்தன் ஆற்றிய தொண்டு அளப்பறியது.
ஈழ விடுதலைப்போர் நடந்து கொண்டிருந்தபொழுது இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பிய இராணுவ தளவாடங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் நீலவேந்தனும் கைதாகி சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்தது.





