அமெரிக்க ஜனாதிபதியின் தலைமை உதவியாளராக அவரது மகள் இவன்கா ட்ரம்பை நியமிக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவன் காவின் கணவரான ஜெரெட் குஷ்னர் ட்ரம்பின் ஆலோசகர்களில் ஒருவராக பதவி வகித்து வருகிறார்.
அரச நிர்வாகத்தில் தன்னுடைய மகளான இவன்காவிற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால் வெள்ளை மாளிகையில் இவன்காவிற்கு ஓர் அலுவலகத்தை ட்ரம்ப் ஒதுக்கினார்.
ஆனால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘நிர்வாகப் பதவி எதையும் வகிக்காமல் வெள்ளை மாளிகையில் இவன்காவிற்கு அலுவலகம் ஒதுக்குவது தவறு’ என விமர்சனம் எழுந்தது.
இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து தன்னுடைய முதன்மை உதவியாளராக இவன்காவை பதவியில் அமர்த்துவதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம் ஜனாதிபதியுடன் முழு நேரமும் இருப்பதுடன், அவருடைய முக்கிய நடவடிக்கைகளைக் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு தற்போது இவன்காவிற்கு கிடைத்துள்ளது.
இந்தப் பதவியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவியில் அமர இவன்கா இப்போதே அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






