ஜெர்மன் கால்பந்து அணி பஸ்ஸின் மீது குண்டுத் தாக்குதல்!!

594

 

ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பஸ்ஸில் மூன்று குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன.

பிரதான வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ்ஸுக்கு அருகில் 3 குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மொமாகொ அணிக்கு எதிரான உள்ளுர் சாம்பியன்ஸ்லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க அந்த அணி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தது.

இந்த தருணத்திலேயே பஸ்ஸுக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், விளையாட்டு மைதானத்தை சுற்றி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கால்பந்துப் போட்டி இன்று தாமதமாக இடம்பெறும் வண்ணம் ஒத்திவைக்கப்பட்டது. ஹோசஸ்டன் என்ற பகுதியில், நகருக்கு வெளியே ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.

இதுதொடர்பாக அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொருஸியா டார்ட்மண்ட் அணி புறப்பட்ட சிறிது நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பஸ்ஸின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்த்ரா முன்பு விளையாடிய பார்சிலோனோ கால்பந்து கிளப்பும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயும் பர்த்ரா விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் முன்னிலையில் உள்ள அணிகளில் நான்காவது முக்கிய அணி டார்ட்மன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.