திருநங்கை படைத்த சாதனை : விருது வழங்கப்பட்டு கெளரவம்!!

1286

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் இளம் சாதனை திருநங்கை -2017 என்ற விருது அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி தொடங்கியது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்திருந்தனர்.

இதையடுத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே இளம் சாதனை திருநங்கை விருது, முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு ஆதரவான போராட்டங்களிலும், சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் கிரேஸ் பானு.
இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள கிரேஸ் பானு தனது பேஸ்புக் பக்கத்தில், லட்சக்கணக்கான மூத்த திருநங்கைகள் மற்றும் இளைய திருநங்கைகள் முன்னிலையில் எனக்கும் என்னுடைய சமூக செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் இளம் சாதனை திருநங்கை -2017″ என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

எத்தனையோ அங்கீகாரங்கள் விருதுகள் நமக்கு கிடைத்தாலும் நாம் யாருக்காக போராடுகிறோமோ அவர்கள் நம்மை அங்கீகரிக்கும் மனம் யாருக்கும் வராது என் சமூகமே என்னை ஊக்குவித்து இந்த விருதை வழங்கியது மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.