இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்கத்தை சேர்ந்தவர் விவேக் பிரசாத், இவர் மனைவி ஜெயந்தி, தொழிலதிபரான விவேக் கடந்த ஒரு வருடமாக புதுச்சேரியில் தங்கியிருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 1ஆம் திகதி தனது கணவரை காணவில்லை என ஜெயந்தி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், விவேக் பணிபுரியும் குடிநீர் சுத்தரிப்பு நிலையத்தில் அவர் சடலமாக புதைக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
மேலும், விவேக்கின் உதவியாளர் பாபு தலைமறைவானதை உறுதி செய்த பொலிசார் அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, விவேக்கின் மனைவி ஜெயந்திக்கும், பாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதையறிந்த விவேக் கண்டித்துள்ளார், இதையடுத்து விவேக்கை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த பாபுவும், ஜெயந்தியும் அதன்படி அவரை கொலை செய்துள்ளனர்.
பின்னர் விவேக்கின் சடலத்தை குடிநீர் நிலையத்தில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.






