இலங்கை பெண் மீது ஜேர்மனியருக்கு ஏற்பட்ட காதலால் நடந்த விளைவு!!

543

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இப்ராஹிம் அல்சதுரி என்ற ஜேர்மனியர் வீசா இன்றி இலங்கையில் நீண்டகாலம் தங்கியிருந்த நிலையில், அவரை நாடு கடத்துமாறு களுத்துறை மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை பெண் ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவர் வீசா இன்றி தங்கியிருந்ததாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் உத்தரவிற்கமைய விசேட பாதுகாப்புடன், குறித்த ஜேர்மன் பிரஜை நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரி எல்.எஸ்.ஹெட்டியாராச்சி களுத்துறை நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளார்.

இப்ராஹிம் அல்சதுரி என்ற ஜேர்மனியர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ள நிலையில் அவருடன் நீண்ட காலமாக வசித்து வந்துள்ளார்.

விசா இன்றி வெளிநாட்டவர் ஒருவர் நீண்ட காலமாக இலங்கையில் தங்கியிருப்பது தொடர்பில் பயாகல பொலிஸாரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து களுத்துறை மற்றும் மாலிகாந்த நீதிமன்றத்தினால் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நபர் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கிருந்த தப்பி சென்று காதலியிடம் சென்றுள்ளார்.

எனினும் அவரை மீண்டும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.