வவுனியாவில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்!!

514

 
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மேற்கொண்டுவரும் வெள்ளநிவாரணப்பணிகளில் வவுனியா தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களதும் ஆசிரியர்களதும் பங்களிப்பு குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

தொழில் நுட்பக்கல்லூரி அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் ஏற்பாட்டில் அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்விபயிலும் மாணவர்கள் தமது பங்களிப்பை பல வகையிலும் ஆற்றியுள்ளனர்.

வெள்ள நிவாரணப்பணிகளில் மாவட்ட சமூக சேவை அலுவலகம் ஈடுபட்ட வேளை தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் முன்வந்து வீடுகளிலும் தனியார் நிறுவனங்களிலும் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியில் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது ஈடுபட்டனர்.

இது பல பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உயர்தர மாணவர்கள் சமூகத்துடன் இணைந்து பங்காற்றுவது சமூக அக்கறையுடன் கல்வியை கற்பது நல்ல சமூகவிழுமியமாகப் பாராட்டப்படுகிறது.

மேலும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் இணைந்து சிறுவர்களுக்கான அவசர நிவாரணப்பொதிகளை ஒப்படைத்துள்ளனர். இவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்ப ஏற்பாடுகளை செய்துள்ளார் .

தொடர்ந்தும் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் பொதுமக்கள் நிவாரணப்பொருட்களை ஒப்படைத்த வண்ணம் உள்ளனர் என மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன் தெரிவித்தார்.