வவுனியா பாவற்குளம் கனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராட்டும் கௌரவித்தலும்!!

705

 
முதியோர் விழுமியங்களை பின்பற்றும் வறுமைக்குட்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாவற்குளம் கனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் கூலித் தொழில் செய்து பிள்ளைகளைக் கற்பிக்கும் தாயுடன் , இரண்டு கல்வி கற்கும் தங்கைகள் கொண்ட தந்தையை இழந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவன் இராசையா தனுசனுக்கு இன்று (09.06.2017) வெள்ளிக்கிழமை காலை கல்லூரி முன்றலில் வைத்து துவிச்சக்கர வண்டி பாடசாலை அதிபர் வை.யோகராஜாவினால் வழங்கப்பட்டது.

இம்மாணவன் சுமார் 2.5 கிலோமீற்றர் தூரம் நடந்து வருபவர் . சனி ஞாயிறு தினங்களில் கூலித்தொழில் செய்து குடும்பத்துக்கு உதவி செய்து வருபவர்.

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக லண்டனில் உள்ள V3 அமைப்பு இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது. V3 அமைப்பின் சமூக ஆர்வலர் கலாநிதி ச.சிவதாஸன் அவர்களின் மகள் சி.சிவானாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இவ்வுதவியை வழங்கி இருந்தனர்.

கல்லூரி ஆசிரியர் இ.எஸ்.வரதன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தர் .பாடசாலை அதிபர் தனது உiரையில் இப்பாடசாலையில் கல்விகற்போரில் பெரும்பாலானவர்கள் வறுமைக்குட்பட்டவர்கள் சுமார் 300 வரையான மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் பல மாணவர்கள் கஸ்டத்தின் மத்தியில் கல்விகற்று வருகின்னறனர். V3 அமைப்பினர் எமது தேவைகளில் ஒர் இரண்டையாவது நிறைவேற்றித்தந்தால் பின்தங்கிய பிரதேச இப்பாடசாலை மாணவர்களுக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார்.

பலர் உதவுவதாக கூறி தரவுகளைப்பெற்று பின்னர் எதுவும் செய்யாத சம்பவங்களே அதிகம் உள்ள நிலையில் இந்த அமைப்பும் மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எமது மாணவனுக்கு குறுகிய கால வேண்டுதலில் இந்த உதவியை செய்தமைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார் .

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் இந்தப் பாடசாலை பல சவால்களுடன் இயங்கி வருவதுடன் நல்ல விழுமியப் பண்புகள் கொண்ட, மூத்த சமூகத்தை மதிக்கும் பண்பு கொண்ட மாணவர்களையும், கல்வியில் பல்கலைக்கழகம் என்ற கனவைக் கொண்டுள்ள மாணவர்கனைளயும், அதிகம் கொண்டிருப்பதை குறிப்பிட்டு தனுசன் வறுமையான மாணவன் என்பதால் மட்டுமல்ல, அவரின் நல்ல பண்புகள், மூத்தோரை மதிக்கும் எண்ணம் என்பவற்றால் இவ்வுதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

வளருகின்ற சமூகம் இவ்வகைப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சமூகம் நல்லதை செய்ய தயங்காது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு எனப் பாராட்டிப் பேசினார்.

நிகழ்வில் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் மற்றும் குமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

உதவி பெற்ற மாணவன் இராசையா தனுசன் தனக்கு உதவிய V3 அமைப்பினருக்கு நன்றி தெரிவித்ததுடன் தன்னைப்போல் உள்ள ஏனையமாணவருக்கும் இவ்வாறான அமைப்புக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கல்லூரி ஆசிரியர் எம் .மதியழகன் லண்டன் V3 அமைப்பிற்கும், வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் பணிகளுக்கும் பாடசாலை சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.