வவுனியாவிலிருந்து தெற்கிற்கு நோக்கி உதவிப் பொருட்களுடன் ரயில் புறப்பட்டது!!

1110

 
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ‘மக்கள் தொடர்பாடல்’ என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் அனுசரணையுடன் முன்னெடுத்துள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த மனிதாபிமான ரயில் பயணமானது இன்று (10.06.2017) சனிக்கிழமை காலை 6 மணிக்கு வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பமாகி காலை 10.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது

மக்களிடம் இருந்து பெறப்பட்ட பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பி, புத்தகங்கள், தலையணை, மெத்தை, நுளம்பு வலை, சவர்க்காரம், பற்பசை, சுத்தப்படுத்தும் உபகரணங்கள், கட்டில் விரிப்புக்கள், துவாய், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், பாடசாலை சீருடைகள், புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், செருப்புக்கள் மற்றும் சமயலறை உபகரணங்கள் என்பவற்றை நாளையதினம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கவுள்ளனர்.

குறித்த மனிதாபிமான ரயில் பயணமானது மதவாச்சி, அனுராதபுரம், மாஹோ, கணேவத்த, குருணாகல், பொல்காவல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயங்கொட, கணேமுல்ல, கம்பஹா, ராகம, களனி, ஹுணுப்பிட்டிய, தெமட்டகொட, மருதானை, கொழும்பு கோட்டை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய ரயில் நிலையங்களில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டு செல்லவுள்ளது.